Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல் :– நாமக்கல்லில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் 11,900 பேர் கலந்துகொண்டனர்.
தமிழக முதல்வர் கோப்பை போட்டிக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 3ம் தேதி துவங்கியது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினர் என தனித்தனியாக தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
தடகளம் மற்றும் வாலிபால், கால்பந்து, சிலம்பம், டேபிள் டென்னிஸ், கபடி, பேஸ்கெட் பால், நீச்சல், கிரிக்கெட், ஹாக்கி, செஸ் உள்ளிட்ட பல்வேறு குழு மற்றும் தனிநபர் போட்டிகள் நடத்தப்பட்டது.
15ம் தேதி நடைபெற்ற இறுதி நாள் நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. மேலும், பொது பிரிவினருக்கான கபடி இறுதிப் போட்டி நடத்தப்பட்ட இக்கபாடி போட்டியில், நாமக்கல் மற்றும் குமாரபாளையம் ஸ்போர்ட்ஸ் சங்கத்தினர் விளையாடியதில், நாமக்கல் ஸ்போர்ட்ஸ் சங்கம் வெற்றி பெற்றது. இரண்டு வாரம் நடந்த இப்போட்டிகளில், பள்ளி மாணவ, மாணவியர் 6,048 பேர், கல்லூரி மாணவ, மாணவியர் 4,007 பேர், அரசு ஊழியர்கள் 924 பேர், பொது பிரிவினர் 798 பேர், மாற்றுத்திறனாளிகள் 123 பேர் என, மொத்தம் 11 ஆயிரத்து, 900 பேர் பங்கேற்றனர்.
போட்டிகளில், முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முறையே ரூ. 3,000, 2,000, 1,000 பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். அனைத்து போட்டிகளிலும், வெற்றி பெறுபவர்களுக்கு, மொத்தம், ரூ. 41.58 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பப்பட உள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமையில், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.